Thursday, February 25, 2010

பட்டுன்னு ஒரு கவிதை





’எனக்கு சாமுத்ரிகா பட்டு’
என்று ஆரம்பிக்கும் தொலைக்காட்சி
விளம்பரம் பார்க்கமுடிந்தது
அழகியல் கொண்டாட்டமே

எம் ஊரின் பெண்கள் கச்சை கிழிசல்களை
சீலையில் நாசுக்காய் மறைப்பதும்
சேலையின் ஓட்டைகளில் குழந்தைகளுக்கு
மலர்ச்சியா நிலா காட்டுவதும் இயல்பே

’காஞ்சிவரம்’ படத்தில் ஒரு தந்தையின்
வாக்குறுதி குறுக்கே வந்துபோனது
’உன் கல்யாணத்துக்கு பட்டு சீர் செய்வேன்’
அப்பெண் பெற்றதோ வாய்க்கரிசி


பால்யத்தில் தறி சத்தம் கேட்டு நடந்திருக்கிறேன்
திடீரென காணாமல் போயின ஓர்நாள்
எங்கு தேடுவேன் அந்த அம்சத்வனி ராகத்தை


ஊரை....ஊரென்று சொல்லுவதில்லை
வேறொன்றே....சொல்கின்றனர்!
உறக்கச் சொல்லுடா மானிடவா
மண்ணில் கீழோர் மேலோர் இல்லை!

So மண்ணில் கீழோர் மேலோர் இல்லை
ஒன்றிருந்தால் ஒன்று.. இல்லை

Thursday, February 18, 2010

திருத்தொண்டர் புராணம்





முன்னரவில் தோழியோடு காதலை சொல்லி உருகி

இரவு சுகிர வேறுஒருவளோடு இணைந்துகிடந்து

விடியல் முதல் இறைவனோடு இரவு வரை

முதுகுதண்டு அதுர பூரணத்துவம் பெற்று

காலை நித்தியதியானம் செய்து தெம்பாய் உணர்ந்து
சில மணிநேரத்தில் பெண்களின் பிட்டம் பார்த்து நடந்து

நண்பனுக்கு அட்வைஸ் தந்து அவன் ஞானியென சொல்ல

முழுக்க வியாபாரத்தை பார்த்துக்கொண்டும்

குழந்தையோடு ஐஸ்கீரிம்முக்கு நேரம் ஒதுக்கி

ஒரு ரூபாய் பூமரை தாய் தின்றதால் கதறிகொண்டு
வந்த குழந்தையை வெறிக்கொண்டு சாத்தி

இங்கதான் கவிதையும் பிறந்தது

அவளை அசிங்கமாக திட்டி வந்தபின்னர்
அடித்த அடி வலித்தென்று போனில் சொல்லி
பிள்ளையை பார் என எனக்கான போத்தலை வாங்கியபடி

எனக்கான துணை சரியில்லை வசதியில்லை படிப்பில்லை
படிப்பும் பணமும் இருந்தால் எனை மதிப்பாளா
என சமாதானம் செய்துகொண்டு

இப்ப மட்டும் என்ன வாழுது என்று நினைத்துக்கொண்டே
முதல் ரவுண்டு முடித்தவுடன்
மெய்ஞானம் பெற்று
எல்லாவற்றிலும் இருந்து வெளியேவந்தேன்

Wednesday, February 17, 2010

கண்டு கலந்து கற்க வா – காதல் - II





இரவின் நெடிய உறவுகளில்
உன் ஹிருதயம் மறைபொருளாய்
மறுநாள் தணியும் சுகம்
கனவில் நீகாண் உள்ளம் எனதாய்

உனது கனவில் வரும் நான்
உனைத்தானே பார்க்கிறேன்
என் கனவில் நீ வருவதை போல்
அதில் உன்னைதான் பார்க்கிறேன்

அப்படியென்றால் நிஜக்கனவு
கனவில்லை நிஜம்
கனவில் நிஜம்

தனித்தனி தீவுகளாயினும்
ஒரே பூமியில் தானே
எண்ண ஓட்டத்திற்கு
நெருக்கம் உண்டு

அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது

அது போலதான் நாம்
அது அன்பு – இது காதல்

இனி இரக்கம் என்பது
நமது வேட்டையில் இல்லை
இது காதல் கிறுக்கு
நீ என் காதல் சிறுக்கி

Saturday, February 13, 2010

கண்டு கலந்து கற்க வா – காதல்








கரம் தேட வரம் வேண்டும் அவள் மொத்தமும்

இனி நிற்காது தொடரும் முத்த சத்தம்



பின்னி பிணைந்த ஆன்மாக்கள் ஒன்றாக வேண்டும்

இனி செத்தாலும் பிழைத்தாலும் உன் மடிவேண்டும்



அவளை நினைக்கும் போதே இனிக்கிறது

அவளருகில் இருக்கையில் மரிக்கிறது காலம்



கண்டு கலந்து கற்க வா – காதல்



அவளைக் கண்டு கலந்து அனுஅனுவாய் கற்க ஆசை

விழையும் மனம்

சுண்டும் அவள் கவிதை

சீண்டும் என் மனதை

ருத்திரமாகயிருந்த மனம்

பொங்கும் ரௌத்திரமாய்



சிந்தை முழுக்க வளம் வருகிறாய்

எனை வெற்றிக் கொண்டவளாக



நாமும் சிதைந்து எரிவோம் ஆழி தீயென

உள்ளக்குமுறள்கள் பிரிவின் வேதனைகளை சுட்டு எரிக்கிறேன்

இனி வலம் வருவோம்

உலகை, உள்மத்தங்களை





தனித்து தவம் செய்துக்கொண்டிருந்தவன் நான்

தாகம் தனிக்க வந்த பேரானந்தம் நீ



சுகந்து வந்த தேவதை நீ

கொடுத்துவிடு உன் இதயம்

அல்லது கொய்துவிடு என் தலையை



மரண புத்துகளில் நெளியும் கருநாகம்போல

அசைகிறது உன் தனிமை என்னிடம்

நீ உணரக்காண்பாயோ

உன் சூல் கொண்ட மார்பும்

வேல் போன்ற கூரிய விழிகளும்



வார்த்தை பிசாசுகள்

கண்மண் தெரியாமல்

பாலைவன புயலைப்போல்

அடித்து நொறுக்கிறது எனை

(தொடரும்)

Friday, February 12, 2010

அற்ற




வார்த்தைகள் மறுகும்போது
எழுத தொடங்கி !
வார்த்தைகள் தீர்ந்தபின்
வேலையை பார்க்க!

இடைப்பட்ட நேரத்தில்
துலாவியபொழுது
ஊற ஆரம்பித்த
வார்த்தைகள் அத்தனையும்,
எனதல்ல - என
புரிந்த நொடியில்
மறைய தொடங்கின,
ஏற்கனவே சொல்லியும்விட்ட,
வார்த்தைகள்!